தீராக் கனவிலிருந்து
விழுந்து கொண்டிருக்கின்றன
அரளிப்பூக்கள்
மலர் வீழ்ந்த மரங்கள்
கிளையசைத்துக் கிடக்கிறது
காற்றினைத் தின்றபடி
முன்பனியில் கவியும்
தனிமை எரிகிறது
காய்ந்த சருகென
இதழ் மூடிய நெப்பந்தஸ்
உறிஞ்சுகிறது
உள் நுழைந்த வண்டின் உதிரம்
ஆனாலும்
உதிரம்
உதிரத்தின் சுவை.
o
ஆடைகள் நெகிழ்ந்திருந்தன
எனக்காய் ஒரு சமயம்
அகோரிப் பசியென
தின்னப்பட்டன உடல்கள்
உன் பசிக்கென நானும்
என் பசிக்கென நீயும்
என் உடைகளை அணியும்
சமயம் சொன்னாய்
நீ ஆதிக்கவாதி என
அடிமைகள்தான் ஆளுமைகளை
உருவாக்குகிறார்கள் என
உனக்குப் புரிவதில்லை
எப்போதும்.
o
காற்றலைந்த குரலில் சொன்னாய்
உனக்காக இங்கே வந்தேன்
காற்றில் கலைந்து சொன்னாய்
உன்னால் இங்கிருந்து போனேன்.
கலைந்த கற்றாய்
அலைகிறேன் வார்த்தைகளின்
தர்க்கங்களைத் தூக்கிக் கொண்டு
oOo
மறுமொழியொன்றை இடுங்கள்